இந்திய அரசு உதவியுடன் மட்டக்களப்பில் 20 ஆயிரம் வீடுகள்

இந்திய அரசின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

இது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்க்குடியமர்த்தப்பட்டுள்ள   மக்களுக்கான வீட்டு தேவைகள், ,மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவைப்படுகின்ற அத்தியாவசிய   வீடுகள் , சுகாதார வசதிகள் , மலசலகூட வசதிகள்  போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

இந்த நிலையில் ஐந்து நிறுவனங்களின்  ஊடாக இருபதாயிரம் (20 ஆயிரம்) வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான ,வேலைவாய்ப்பு , விவசாயம் ,கால்நடை போன்றவற்றுக்கான பெறுமதி சேர்க்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் , மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.