இந்திய உயர் மட்டக்குழு - மட்டு.அரசாங்க அதிபர் கலந்துரையாடல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தினை அமைப்பது தொடர்பாக இந்தியாவில் இருந்து வருகைதந்த உயர்மட்ட குழுவினருடன் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துiராயடலில் அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்களுக்கு இவ்வாறான உதவித்திட்டம் அவசியம் . இங்கு விவசாயத்தினையும், மீன்பிடி துறையினையும் நம்பி வாழ்கின்ற குடும்பங்கள் அதிகமாக உள்ளனர் . இத்திட்டத்துடன் இணைந்து மாவட்டத்தில் இன்னும் 18,000 மலசல கூடங்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

இந்த கூட்டத்தின் போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு இந்திய அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்படவுள்ள 20,000 வீட்டுத்திட்டத்தினையும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பான மக்களின் எண்ணங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஆர்வம் காட்டிய இந்திய குழுவினர் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவுடன் கள விஜயத்தினையும் மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வகையான வீட்டுத்திட்டங்கள் அவசியமானது என்பதை இந்திய உயர்மட்டக்குழு இதன்போது மக்களுடன் கலந்துரையாடினர்.

550 சதுர பரப்பளவுக்குள் அமைக்கப்படவுள்ள குறித்த வீட்டுத்திட்டங்கள் 70 வீதமான வேலைப் பொறுப்புக்களை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் செயற்படுத்தவுள்ளது. இதற்கான தடங்கல்களை ஏற்படுத்தும் காரணிகளையும் வருகை தந்த இந்திய உயர் மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆராய்ந்தனர். இது தொடர்பான தங்களின் அறிக்கையினை அடுத்தவாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக உயர்மட்டக்குழு இதன்போது தெரிவித்தது.