ஆச்சரியமும் அதிசயமும்தான் ஆசிரியர்கள் இவர்களது சேவை போற்றப்படவேண்டும்

(மண்டூர் ஷமி)

ஆச்சரியமும் அதிசயமும்தான் ஆசிரியர்கள் இவர்களது சேவை போற்றப்படவேண்டும் என

ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்தில் அதிபர் திரு.க.ஜெயகரன் தெரிவித்தார்


ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்தில் அதிபர் திரு.க.ஜெயகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். நிகழ்வில் வித்தியாலய அதிபர் அவர்களி உரையாற்றும் போது

உயிரினை உலகிற்கு படைக்கும் அன்னை முதல் அதிசயம். சான்றோனாக்கி உலகிற்கு அர்ப்பணிக்கும் தந்தை இரண்டாம் அதிசயம். உலகை ஆள உருவாக்கும் பள்ளிச்சாலையில் சொல்லாலும் எழுத்தாலும் என்றும் நம்முன் நிற்கும் ஆச்சரியமும்இ அதிசயமும்தான் ஆசிரியர்கள். தோள்மீதும் மடிமீதும் தவழ்ந்த குழந்தைக்குஇ புதிய அவதாரம் எடுக்கும் பெற்றோர்கள்-ஆசிரியர்கள். வசப்படாத வார்த்தை களை ஒழுங்குபடுத்தி அகப்படாத எழுதுகோலினை கைகளில் அழகு படுத்தி மிரண்டு பார்க்கும் உலகினை எளிதாய்ப் புரியவைத்த அற்புதங்கள் ஆசிரியர்கள்.

உடைகளை நேர்த்தியாக்கி கலையும் தலைமுடியை அன்புக் கரங்களால் கோதி மழலைசொற்களின் மழையில் மகிழ்ந்து வாழ்பவர்கள். ஆதலால்தான் சின்னக் குழந்தைகளின் ஒவ்வொரு குறும்பும் அவர்களின் பார்வைக்கு விளையாட்டாகவே தெரிகிறது.வீட்டினுள் செய்கின்ற குறும்புகளெல்லாம் வகுப்பறை நுழையும் ஆசிரியரின் வலதுகை ஆட்காட்டி விரல் அவரின் உதட்டின் முன்னால் நிற்க மொத்த வகுப்பு அறையும் நிசப்தமாய்ப் பார்க்கின்ற போது இந்த உலகின் அளப்பரியஆச்சரியம் ஆசிரியர்தானே.


விடுமுறை நாட்களில் நாலு குழந்தை களை உட்கார வைத்து நான் தான் பத்மா டீச்சர் நான் சொல்ற மாதிரி நீங்க நடக்கணும் புரிஞ்சதா?என ஒரு வீட்டிற்குள்ளோ தெருவிலோ கிராமங்களில் ஏதோ ஒரு மரத்தடியிலோ அரங்கேறுமே ஒரு பள்ளிக்கூடம் அப்பொழுதுதான் ஆசிரியத்தின் அற்புதம் மலர ஆரம்பிக்கும். படங்களைப் பார்த்து மட்டுமே மகிழ்ந்துபோகும் குழந்தைப் பருவத்தில் கல்வியின் அடிப்படையினை ஆழமாய் மனதில் உழுபவர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். ஒவ்வொரு குழந்தையும் நாம் சொல்வதைப் புரிந்து கற்றுக்கொள்வதை விட செயல்பாடுகளை கவனித்து அதையே திரும்பச் செய்து கற்றுக்கொள்கிறார்கள்.





மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருவதோடு தங்களது வாழ்க்கை மூலம் அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள். யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர் என்பது ஜெர்மன் நாட்டு அறிஞர் கதேயின் கருத்து.வகுப்பறைக்குள் நுழைகின்றபோது ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒரு சினிமாவில் ஹீரோவைப் பார்க்கின்ற உற்சாகத்தை உருவாக்குகின்றவர்கள்தான் ஆசிரியர்கள்.சொல்லிக் கொடுப்பதைக்காட்டிலும் நடத்தியதை மனதில் புரியும்படி செய்வதைக்காட்டிலும் வாழ்வின் வெற்றித்தருணங்களுக்கு அடிகோலிடும் ஆசிரியர்கள்தான் நம்மை புருவம் உயர்த்திப் பார்க்க வைப்பவர்கள். அதனால்தான் நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.


ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப் பட்டிருக்கிறேன் என்றார் மாவீரன் அலெக்சாண்டர். ஒவ்வொரு மாணவனுக்கும் கனவுகள் உண்டு. அந்த கனவுகளை இலட்சியமாக்கும் வல்லமை கொண்டவர்கள் ஆசிரியர்கள். சாதாரண மாணவனை சாதனையாளனாக்குபவர்கள். சிவசுப்பிரமணிய ஐயர் என்னும் ஆசிரியரின் உற்சாகமான வகுப்பறை தாண்டியநிகழ்வுதான் அப்துல் கலாம் என்னும் மாணவனுக்குள் விமானியாகவேண்டும் என்ற சிறகுகள் முளைக்க வைத்தது. மகாத்மா காந்தி சத்தியசோதனையில் தனது ஆசிரியர் கிருஷ்ண சங்கர பாண்டியாவை நன்றியுடன் நினைக்கின்றேன் என்ற வரிகளால் அலங்கரிக்கிறார். எனவே 'பாடப்புத்தகம் தாண்டி சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியர்கள் பிற்காலத்தில் மாணவர்கள் எழுதும் புத்தகத்திற்குள் இருப்பார்கள்'.