பெண் வலயக்கல்வி பணிப்பாளர் மாகாணக் கல்வி பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை –ஞா.ஸ்ரீநேசன்

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களது மட்டக்களப்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் பல ஆராயப்பட்டன. கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ,ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,


அண்மையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் பணிப்பாளராக ஜனாப். மன்சூர் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். இவரது நியமனத்தின் பின்னர் எமது மாவட்ட பெண் வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவர் உண்மைக்கு புறம்பான செய்தியினை கூறிவருவதாக அறிகின்றேன்.


அதாவது தனக்கு கிடைக்க வேண்டிய மாகாண கல்விப் பணிப்பாளர்  நியமனத்தினை தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு தடுத்ததாக  கூறி வருகின்றாராம். மாகாண கல்விப் பணிப்பாளர்  நியமனம் வழங்கப்படும்போது ஆளுநர் அவர்கள், எமது கட்சியிடமோ என்னிடமோ எந்தவொரு கலந்துரையாடலையும் செய்யவில்லை. எனினும் மேற்படி வலயக்கல்விப் பணிப்பாளர் பொய்யான குற்றச் சாட்டுக்களை கூறி வருவது தொடர்பாக பலர்   என்னிடம் கேட்டிருந்தனர். அது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.

எமது மக்களுக்கு, நேர்மையாக ,வினைத்திறனுடன் சேவையாற்றக் கூடிய சகலரையும் முன்கொண்டு செல்வதற்கு எமது கட்சி பாடுபடுகிறது. எமது கடந்தகால செயற்பாடுகளை பார்க்கும் போது இது சகலருக்கும் விளங்கும். ஆனால் பாரிய பொறுப்புக்களை ஏற்று வெளிமாவட்டங்களில் கடமையாற்ற எமது அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். தமது திறமை மீதே நம்பிக்கை இல்லாத இவர்கள் தமது குடும்பம், தமது ஊர்,தமது மாவட்டம் என ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே  ஒடுங்கிக் கிடக்கவே விருப்பம் கொண்டுள்ளனர்.

இவ்வாறு குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டவே விரும்பிய இவர், மாகாணக் கல்வி பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றே எனக்கு தகவல் கிடைத்தது. தமது இயலாமையினை மறைக்க அரசியல்வாதிகளை சாட்டுச்சொல்வது வேடிக்கையாக  உள்ளது. இந்த விடயம் தொடர்பாக என்னிடம் வினாவிய பிரமுகர் ஒருவரிடம், குறித்த பெண் வலயக்கல்வி பணிப்பாளருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், உடனடியாக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுவதக்கான சம்மதக் கடிதத்தினை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொண்டேன்.  ஆயினும் சிறிது நேரத்தில் என்னை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த பிரமுகர் குறித்த பெண் வலயக் கல்விப் பணிப்பாளர் சம்மதக் கடிதம் தர மறுத்து பல்வேறு சாட்டுக்களை கூறுவதாகவும் தெரிவித்து, உங்கள் மீது தவறு ஏதுமில்லை என குறிப்பிட்டிருந்தார்.

நமது அதிகாரிகள் கடமையுடன் தமது திறமைகளையும் வளர்த்துக் கொண்டு எமது சமூகத்துக்கு சேவையாற்ற முன்வரவேண்டும். தமது இயலாமையினை மற்றவர்களின் தலையில் கட்டி விட்டு தப்பித்துக்கொள்வதென்பது ஒரு குறைபாடாகவே நான் கருதுகின்றேன். குறிப்பிட்ட ஒரு வலயம் மாத்திரம் எமது உலகம் என்பது தவறான ஒரு நிலைப்பாடாகும் என்பதை இவர் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.