நீரில் மூழ்கி மரணமான மீனவருக்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடு

மீன்பிடியின் போது நீரில் மூழ்கி மரணமான மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மியான்கல் குளத்தைச் சேர்ந்த குமாரசாமி புஸ்பராஜாவின் குடும்பத்திற்கு ரூபா 10 இலட்சம் காப்புறுதி நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.


இந்த காப்புறுதிப்பணத்தினை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் மாவட்ட செயலகத்தில் நேற்று வழங்கினார்.

இதனை வழங்குவதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜே.நெல்சன் மேற்கொண்டிருந்தார்.

குமாரசாமி புஸ்பராஜா கடந்த ஜுலை மாதம் 7ஆம் திகதி மீன்பிடிக்காகச் சென்ற வேளை வீசிய பலத்த காற்று காரணமாக தோணி குடை சாய்ந்ததில் நீரில் மூழ்கி மரணமானமை குறிப்பிடத்தக்கது.

மீனவர்களுடைய நலன்களைப் பேணும் வகையில் மீன்பிடி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தீவர சயுர காப்புறுதித்திட்டத்தின் ஊடாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியில் 1350 குடும்பங்கள் வரையில் உள்ளனர் என்பதுடன். 400 மீனவர்கள் காப்புறுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நீர் வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜே.நெல்சன் தெரிவித்தார்.