தனியாரால் அடாவடியாக வசமாக்கப்பட்டிருந்த வடிகாண்களை மாநகரசபை கையகப்படுத்தி புனரமைப்பு.



தனியாரால் அடாவடியாக  வசமாக்கப்பட்டிருந்த வடிகாண்களை மாநகரசபை கையகப்படுத்தி புனரமைப்பு...

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியாரால் சட்டவிரோதமான முறையில் அடாவடியாக  பிடித்து உரிமைகோரிவந்த பாரிய வடிகாண்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபையானது மேற்கொண்டு வருகின்றது.

கடந்த பல வருடங்களாக மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் நீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த வடிகாண்களையும், தோணாக்களையும் தனியார் சிலர் அடாத்தாகப் பிடித்து வேலியடைத்து உரிமை கோரி வந்தனர். இதனால் மழை காலங்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு வழியின்மையால் பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு மட்டக்களப்பு மாநகர மக்கள் முகங்கொடுத்து வந்தனர்.   

இதன் காரணமாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனின் பணிப்பின் பேரில் குறித்த வடிகாண்களையும், தோணாக்களையும் கையகப்படுத்தும் செயற்பாடுகளை மாநகர சபையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

சட்ட விரோதமாக மழை நீர் வடிந்தோடும் வடிகாண்களையும் தோணாக்களையும் அடைத்து வைத்து உரிமைகோரி வந்தோருக்கு கடிதம் மூலம், அங்கிருந்து அகலும்படி அறிவிக்கப்பட்டும், துண்டுப்பிரசுரங்கள் மூலம் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வந்த நிலையில் தற்போது மாநகரசபையின் அதிகாரத்தினைப் பிரயோகித்து குறிப்பிட்ட 1700 மீற்றர் நீளமான வடிகாண்களைக் கையகப்படுத்தி, அவற்றை புனர்நிர்மானம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள இந்த வடிகாண்களை மாநகர சபை பொறுப்பற்று, புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுவருவதன் ஊடாக மழை காலங்களில் கல்லடி, நாவற்குடா, காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசங்களில் பாரிய வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.