சாய்ந்தமருதில் வெள்ள அபாயம்



(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்)

சாய்ந்தமருதில் வெள்ள அபாயம்; மாநகர சபை அவசர நடவடிக்கை; முகத்துவாரம் திறப்பு

கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் விடுத்த அவசர வேண்டுகோளின் பேரில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (06) அங்கு விஜயம் செய்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

வெள்ள நீரை உள்வாங்கி கடலுக்கு செலுத்தும் தோணா ஆறு, சல்பீனியாக்களினாலும் திண்மக் கழிவுகளினாலும் நிறைந்து, வெள்ள நீரோட்டத்திற்கு தடையாக காணப்படுகின்றன. இன்று காலை தொடக்கம் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் தோணாவின் முக்கிய சில இடங்களில் இத்தடைகள் அகற்றப்பட்டு, நீரோட்டம் சீர்செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை தோணாவின் கடல்வாய் (முகத்துவாரம்) திறக்கப்பட்டு, வெள்ள நீரானது கடலை சென்றடைவதற்கான துரித நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று தீபாவளி அரச விடுமுறை தினமாக இருந்தபோதிலும் முதல்வரின் அவசர பணிப்புரையின் பிரகாரம் கல்முனை மாநகர சபை ஊழியர்கள் இத்துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது முதல்வர் மற்றும் ஆணையாளருடன் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேச்சைக்குழு உறுப்பினர்களும் களத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.