இலங்கை ஜனநாயக கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் – பொதுநலவாய செயலாளர் நாயகம்




இலங்கை ஜனநாயக கலாச்சாரத்தையும் நடைமுறைகளையும் பாதுகாக்குமாறும், அவற்றை பின்பற்றுமாறும் பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பட்ரிசீயா ஸ்கொட்லான்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பட்ரிசீயா ஸ்கொட்லான்ட்டின் பேச்சாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தை 14ஆம் திகதி கூட்டும் ஜனாதிபதியின் அறிவிப்பை கவனத்திலெடுத்துள்ளார் என தெரிவித்துள்ள அவரின் பேச்சாளர், அரசமைப்பின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு நாடாளுமன்றம் விரைவில் கூடும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் தலைவர்களையும் மக்களையும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டுள்ள செயலாளர் நாயகம், நாட்டின் அரசமைப்பும் சட்டத்தின் ஆட்சியும் மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.