நாடாளுமன்றத்திற்குள் ஆயுதம் கொண்டுசென்ற உறுப்பினர்களுக்கு சிக்கல்!




நாடாளுமன்றத்திற்குள் சில அமைச்சர்கள் கூரிய ஆயுதங்களை கொண்டு சென்றமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் நேற்று (வியாழக்கிழமை) கூடியபோது, பெரும் குழப்பநிலை உருவாகி உறுப்பினர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.

குறித்த மோதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த நாடாளுமன்ற பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டார்

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கையில் கூரிய ஆயுதம் காணப்பட்டது” என அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாடாளுமன்றத்திற்குள் உறுப்பினர்கள் உள்நுழையும் போது, கடும் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் ஆயுதத்தை வெளியே இருந்து கொண்டு செல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் இது நாடாளுமன்ற உணவகத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டுமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.