கருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது




பாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக கரு ஜயசூரிய செயற்பட்டமையின் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி நாளைமறுதினம் பாராளுமன்றம் கூடியிருந்தாலும் கரு ஜயசூரிய தனது கட்சி சார்பாகவே செயற்பட்டிருப்பார். எனவே தான் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

பிரதமர் மஹிந்தராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் உறுப்புரிமையை ஏற்றிருந்தாலும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே செயற்படுவார். அவ்வாறு இணைந்து செயற்படுவராக இருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக அவரையே களமிறக்குவோம். எனினும் சின்னம் குறித்து அடுத்த கட்டங்களில் தீரமானிக்கப்படும் என்றார்.