திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்



(திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு)

ஆறுமுகப்பெருமானின் திருவடிகளை நோக்கி சஷ்டியை அனுஷ்டித்தால் ஒரு குறையும் அடியவரை தொடராது எனும் நம்பிக்கையின் அடிப்படையில் கந்தசஷ்டி விரதம் உலகமெங்கும் வாழும் இந்து மக்களால் நோக்கப்பட ஆலயங்களில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி சஷ்டிவிரதம் ஒவ்வொரு வருடமும் ஜப்பசி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் சஷ்டி திதி வரையுள்ள தினங்கள் கந்தசஷ்டி விரத நோன்பு காலமாகும். அந்தவகையில் நாளை வியாழக்கிமை 08ம் திகதி விரதம் ஆரம்பமாகி எதிர்வரும் 13ம் திகதி செவ்வாய்க்கிழமைமாலை சூரசங்காரம் நிகழ்வுடன் சஷ்டிவிரதம் நிறைவுபெறுகின்றது.

திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமிய ஆலயத்தில் இம்முறை இடம்பெற்ற கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து மிகவும் சிறப்பான முறையில் கந்தசஷ்டி விரதம் இடம்பெறவுள்ளதுடன் இரண்டு வருடங்கள் இடம்பெறாது இருந்த சூரன்போர் நிகழ்வும் இம்முறை இடம்பெறவுள்ளதாகவும் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கந்த சஷடி விரதமானது ஆறு நாட்களும் முருகப்பெருமானை நோக்கி விரதமிருக்கும் புனித காலமாக கருதப்படுகின்றது. விரதம் நோக்கின்ற அடியார்கள் விரதகாலங்களில் தினமும் பிரம்மமுகூர்த்த வேளையில் நித்திரை விட்டு எழுந்து நீராடி நித்திய கடன்களை முடித்து தூய ஆடைகள் அணிந்து மலர்தூவி தூபதீபங்கள் காட்டி முருகன் தோத்திர பாமாலைகளை துதி செய்வதுடன் பகலில் தூக்கம் செய்யாது முருகப் பெருமானின் நாங்களை நாவினால் உச்சரித்துக் கொண்டு இருப்பது நன்று. அடியார்கள் பிற்பகல் வேளையில் முருகன் ஆலயங்களில் இடம்பெரும் கந்தபுராண படலம் ஓதுதல், விசேட பூஜை வழிபாடுகளில் பங்குகொள்வதுடன் மலர் தூவி முருகனை அர்ச்சித்து வழிபடுவதுடன் நான் ஏனும் மமதை இன்றி தெய்வ சிந்தனையில் வாழ்வதும் நன்று.