பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் சபாநாயகரினால் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளது.
இதனை சபாநாயகர் அலுவலகம் நேற்றுமாலை உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு வருமாறு சபாநாயகர் கருஜயசூரிய அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்போது ஏற்கனவே விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இன்று 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதுடன் இன்றைய தினமே பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதா என்ற தீர்மானமும் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டால் இன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபித்தால். அவர் தொடர்ந்து பிரதமராக நீடிக்கலாம். மாறாக ரணில் விக்கிரமசிங்க இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தால் அவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.