வரவு- செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல்!

எதிர்வரும் ஆண்டின் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்கு பொருத்தமான பாதீட்டை நிறைவேற்றியதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.


அலரிமாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அஜித் பி பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தலுக்கு செல்ல நாம் தயாராக உள்ளோம்.

மேலும் மக்கள் எமக்கு 5 ஆண்டுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கே அதிகாரத்தினை வழங்கியுள்ளனர். ஆகையால் அக்காலம் நிறைவுபெறும் வரையில் ஆட்சி செய்ய விரும்புகின்றோம்.

இவ்விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்குவராயின், எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல நாம் தயாராக உள்ளோம்.

இதேவேளை நாட்டின் பொருளாத வீழ்ச்சியை தடுப்பதற்கான பாதீட்டை நிறைவேற்றிய பின்னர் பொது தேர்தலுக்கு செல்லவே எமக்கு விருப்பம்” என அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.