தேர்தலை நடத்துவதற்கு சுமார் 500 கோடி வரை தேவைப்படும் ! பொறுமையாக இருங்கள்

மாகாண சபையை எதிர்பார்த்திருந்த எமக்கு பாராளுமன்ற தேர்தலே கிடைத்துள்ளது. அதற்காக தேர்தலை நடத்தமால் விட இயலாது.

எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின் பிகாரமே பாராளுமன்ற தேர்தலை நடத்தப்படும் என  சுயாதீன தேர்தல்கள்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு சுமார் 500 கோடி வரை தேவைப்படும் . எதுவாக இருந்தாலும் பொறுமையாக தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொது தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் சட்டத்திற்கமையவும் அரசியலமைப்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமையவே பொது தேர்தல் நடத்தப்படும்.நிலைமைகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துள்ளதுடன் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி தேர்தலை நடத்தும் வகையிலும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் அமுலுக்கும் வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுருந்தார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை  அவசரமாக சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, ராஜித சேனாராத்ன, கயந்த கருணாதிலக, சம்பிக ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பலரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பான சட்டதாரணிகள் சிலரும்  கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திபபின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிடடார்.