500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்


நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை காண்பிப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100- 500 மில்லியன் வரை விலை பேசப்பட்டமையானது மிகவும் கவலைக்குரிய விடயமென்றும் ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

கடந்த வௌ்ளிக்கிழமையன்று கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் போல் வரலாற்றில் இவ்வாறானதொரு நாடாளுமன்றம் இருக்கவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பக்கச்சசார்பான நடவடிக்கையும் தாம் நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கான இரண்டாவது காரணமென்றும் 162 ஆசனங்களுடன்  முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்னவை பதவி நீக்கிவிட்டு, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த போது சபாநாயகர் பெரும்பான்மை பற்றிக் கதைக்கவில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படாமல் 14ஆம் திகதி கூட்டப்பட்டிருந்தால், மரணம் கூட சம்பவத்திருக்குமென்றும் நாட்டில் குழப்ப நிலையொன்று ஏற்படாமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தலை நடத்த முடிவெடுத்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.