அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது :மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற  உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் மக்களுக்குப் பொதுத் தேர்தல் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காக இருந்தது.

பொதுத் தேர்தல் ஒன்று நடாத்தப்படாத சூழ்நிலையில் நான் பிரதமர் பதவியை வகிப்பதில் அர்த்தமில்லை. நீதிமன்றின் நீண்ட தீர்ப்பை நான் வாசித்தேன் அதனை மதித்து செயற்பட வேண்டும்.

பாராளுமன்றில் வெறுமனே 103 ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்து இயக்கிக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐ.தே.க மறுப்பு தெரிவிக்குமாயின் பாராளுமன்றில் ஐ.தே.க பெரும்பான்மையை இழக்க நேரிடும்.

ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த மூன்றரை வருடங்களில் ஐ.தே.க 20.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளது.

நாங்கள் நாட்டின் அபிவிருத்திக்காகவே கடன் வாங்கினோம். அது அனைவருக்கும் தெரிந்த விடயமே ஆனால் அவர்கள் கடன் வாங்கியது தேவயைற்ற செயற்பாடுகளுக்காக. இந் நிலையில் மீண்டும் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைக்கின்ற பட்சத்தில் மிகுதியிருக்கும் காலத்தில் எவ்வளவு தொகையை கடனாக பெறுவார்கள் எனத் தெரியவில்லை.

டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடையவுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் பின் போட்டதைப் போன்று பாராளுமன்றத் தேர்தலையும் இந்த அரசாங்கம் பிற்போடும்.

மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், அந்த மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்துவோம்.

தேர்தல் இன்றி முன்னோக்கிச் செல்லும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. ஒரு வருடமும் மூன்று மாதங்களாலும் தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எமது பிரதான இலக்கு.

மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டிருப்பது போன்று எல்லை நிர்ணய பிரச்சினையை ஏற்படுத்தி 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலையும் பிற்போடுவதற்கே அவர்கள் திட்டமிட்டிருக்கின்றார்கள்.

அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரா நாயக்க குமாரதுங்கவிற்கு தெரியாமலேயே விடுதலைப்புலிகளுடனான சமாதான உடன் படிக்கையில் ரணில் கைச்சாத்திட்டார். அதே போல ஜனாதிபதிக்கு தெரியாமலேயே பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் எதிர்காலத்தில் செய்யக் கூடும். என மஹிந்த ராஜபக்ஷ தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.