பொதுச் சேவையை தடையின்றி நிறைவேற்றுங்கள்



ஜனாதிபதி அமைச்சின் செயலர்களுக்கு உத்தரவு

சகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதியின் தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியினால் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையினர் தமது கடமைகளை நிறைவேற்றுவதனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் (03) இடைக்கால தடை உத்தரவு விடுக்கப்பட்டது.

அதற்கமைய நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைவாக பொதுச்சேவைகளை எந்தவித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளும் கட்டளைகளும் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுமாறு அனைத்து அரச சேவையாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.