இலங்கையரசாங்கத்தின் இறையாண்மையை பாதிக்கும் விதத்தில் செயற்படமாட்டோம்


தேசத்தின் வேர்கள் அமைப்பானது  இலங்கையரசாங்கத்தின் இறையாண்மையை பாதிக்கும் விதத்தில் செயற்படமாட்டோம் என்கின்றார் தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் 


கடந்த 30 ஆம் திகதி வவுணதீவு பகுதியில் உள்ள பொலீஸ் சோதனைச்சாவடியில் இனந்தெரியாத நபர்களினால் நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இரண்டு பொலீஸ் காண்ஸ்டபிள்கள் மிக கொடூரமான நிலையில் கொல்லப்பட்டனர்.

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறி தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் உட்பட மூன்று உறுப்பினர்கள் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரினால் விசாரனைக்குட்படுத்தப்பட்டு அதில் இருவர் விடுவிக்கப்பட்டனர். 

அந்தவகையில் தற்போது சந்தேகத்திற்கு இடமான பிரதான குற்றவாளி என இவ்வமைப்பின் உறுப்பினரான அஜந்தன் எனப்படும் கே.இராசகுமாரன் தொடர்ந்தும் குற்றப்புலனாய்வு பிரிவினரினால் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்பட்டு வருகின்றமையினாலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் மூலமாக உண்மைத் தன்மையினையும் வெளிக்கொனரும் நோக்கில் இன்று 05 ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்

தேசத்தின் வேர்கள் அமைப்பானது கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகளுக்கும் ஒட்டு மொத்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும் அதனடிப்படையில் நாம் கடந்த காலங்களில் சில நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்தோம்.

அண்மையில் நடைபெற்ற வவுணதீவு பொலீஸார் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் எமது அமைப்பின் உறுப்பினர்களில் அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார் அத்துடன் அன்றைய தினம் நானும் இன்னுமொரு உறுப்பினரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டோம்.

இதில் உண்மைத்தன்மையானது எமது அமைப்பின் உள்ள உறுப்பினர்களுக்கும் அக்கொலைக்குற்றச்சாட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுடன் கடந்த சில தினங்களில் வெளிநாடு மற்றும் இலங்கையில் உள்ள சில  ஊடகங்கள் வாயிலாக தேசத்தின் வேர்கள் அமைப்பிற்கும் கொலைச்குற்றச்சாட்டிற்கும் சம்மந்தம் உள்ளதாகவும் அதன் தலைவர் தேடப்பட்டுவருவதாகவும் பிரசுரிக்கப்பட்டிள்ளது இதில் ஊடகங்கள் சரியான உண்மைத்தன்மையினை வெளிப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் எமது தேசத்தின் வேர்கள் அமைப்பானது  இலங்கையரசாங்கத்தின் இறையாண்மையை பாதிக்கும் விதத்தில் செயற்படமாட்டோம் என்பதுடன் 30 வருடகால யுத்த சூழ்நிலையில் பல போராளிகள் சொல்லொனாத் துயரங்களை அனுபவித்துவந்ததுடன் யுத்த முடிவிற்கு பின்னரும் அவர்கள் பலவிதமான வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவருகின்றனர் இவ்வாரான சந்தர்ப்பங்களில் முன்னாள் போராளிகள் மீது அப்பட்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம் இது தொடர்பாக சர்வதேசம் கவணம் செலுத்தி இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.