ஓமடியாமடு கிராமத்துக்கு மட்டு. மாவட்ட அரச அதிபர் நேரடி விஜயம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு





மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு கிராமத்திற்கு விஜயம் செய்த அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அப்பிரதேச மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், தீர்வுகளை வழங்குவதற்கான நடவக்கைகளையும் மேற்கொண்டார்.


ஓமடியாமடுவில் அமைந்துள்ள பல்தேவைக் கட்டத்தில் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுனின் ஏற்பாட்டில், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கமநல அமைப்ப்புப்பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இச் சந்திப்பு நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.

இச் சந்திப்பின்போது, போக்குவரத்து வசதிகள் குறைவாகக் காணப்படும் தமது பிரதேசத்தின் பிரதான பாதையான றிதிதன்ன - ஓமடியாமடு வீதி நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படுவதாகவும் அவ்வீதியினால் போக்குவரத்து மேற்கொள்வதில் தமக்குள்ள சிரமத்தினை தீர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்த ஓமடியாமடு மக்களுக்கு பதிலளித்த அரசாங்க அதிபர் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான அவ்வீதியினை அதிகார சபையுடன் கலந்துரையாடி அவ் வீதியைத் திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

அத்துடன், தமது பிரதேசத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கிளினிக் சேவைகள் சீராக நடைபெறுவதில்லை என்றும் இதனால் நோய்கள் ஏற்படுகின்ற வேளையில் பொலநறுவை அல்லது வாழைச்சேனை வைத்தியசாலைகளுக்கு செல்வதற்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் மக்கள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மருத்துவப் பிரச்சினைக்கு தீர:வு காண்பதாகத் தெரிவித்தார்.

அதே போன்று சமுர்த்தி வழங்கல், வீட்டுப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் காணப்படுவதாகவும் மக்கள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான ஓமடியாமடு பிரதேசத்திற்கு அரசாங்க அதிபர் வருகை தந்து தங்களது பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து கொண்டமை குறித்து அக் கிராம மக்கள் அரசாங்க அதிபருக்கு நன்றி தெரிவித்ததுடன், மங்களது மகிழ்ச்சியினையும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.