கைகலப்பில் தலையில் இரும்புக்கம்பி ஏறிய நிலையில் உயிருக்குப் போராடும் இளைஞர்

பாறுக் ஷிஹான் 

முல்லைத்தீவுப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே   இடம்பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.



இளைஞரின் காதுக்கு மேற்பகுதியில் இரும்புக் கம்பி ஒன்றால் குத்தப்பட்டு, கம்பி மற்றக்காதுக்கு மேல் பகுதி வழியாக வெளியே வந்துள்ளது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன் அவருக்கு நரம்பியல் மருத்துவர்கள் குழு சத்திரசிகிச்சையை முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாகவும் அறியமுடிகிறது.

இந்தக் கைகலப்பு இன்று(14) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புத்தளத்தைச் சேர்ந்த  முஹமட்  பாஸில் (வயது -25) என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்தார்.

“புத்தளத்திலிருந்து பழைய இரும்புகளைக் கொள்வனவு செய்வதற்காக இளைஞனும் சகாக்களுக்கும்  வடி வாகனத்தில் முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளனர். முல்லைத்தீவு நகருக்கு அண்மித்த இடமொன்றில் மர நிழலில் இளைப்பாறிய போது, இளைஞருக்கும் சகாக்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதன்போது இளைஞர் மீது மற்றொருவர் இரும்புக் கம்பியால் குத்தினார். அதனால் அவர் நிலைகுழைந்து நிலத்தில் சரிந்தார். தலையில் காயத்துடன், முல்லைத்தீவு வைத்தியசாலையில் இன்று மதியம் 1.40 மணிக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து அவர் அம்புலன்ஸில் இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்” என்று இளைஞருடன் வருகை தந்த மாமா உறவுமுறையுடைய ஒருவர் தெரிவித்தார்.

“இளைஞருக்கு அதிகளவு குருதிப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவரது தலை ஸ்கான் செய்து பார்க்கப்பட்டது. இரும்புக் கம்பி ஒரு காதுப் பக்கமாக நுழைந்து மறு காதுப் பக்கமாக வெளியில் வந்துள்ளது. அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்.
தலையில் சத்திரசிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.