சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்


மட்டக்களப்பு வவுணதீவு காவற் சாவடியில் கடந்த 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸின் இறுதிச்சடங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரின் பிரசன்னத்துடனும் ஜனாதிபதி, பொலிஸ்  மா அதிபர் ஆகியோரின் இரங்கலுரையுடனும் பொலிஸ் மரியாதையுடனும் அவரது சொந்த ஊரான பெரியநீலாவணை பொது மயானத்தில் இடம்பெற்றது.


குறித்த இறுதிசடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள்  கலந்து கொண்டனர்.

அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட பூதவுடலை பொது மயானத்திற்கருகில் வைத்து பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டு பூரண பொலிஸ் மரியாதையுடன்  39 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு உடல் நல்லடக்கம்  செய்யப்பட்டது

இறுதிச்  சடங்கிற்கு கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதிப் பொலிஸ் மா அதிபர் கப்பில ஜயசேக்கர அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்ஹ அம்பாரை பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேக்கர உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.   

இதன் போது  ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவினதும் பொலிஸ் மா அதிபரினதும் இரங்கலுரைகள் வாசிக்கப்பட்டன.