உரிமையினை வெற்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றது


(சா.நடனசபேசன்)
பாதிக்கப்பட்டு இருக்கின்ற தமிழர்களுக்கான உரிமையினை வென்றெடுக்கவேண்டும் என்பதற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்ற காலகட்டத்தில் தெருவில் நின்று விமர்சனம் பண்ணுவதை விடுத்து ஆக்கபூர்வமான செயற்பாட்டில் இளைஞர்கள் தங்களை உள்ளாக்க வேண்டும். என நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் முன்னை நாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்தார்

வீடமைப்பு அதிகார சபையினால் நாவிதன்வெளிப் பிரதேசசெயலகத்தின் மத்தியமுகாம்  6 இல் 25 வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன 12 ஆம் திகதி சனிக்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார் 
இந்நிகழ்வில் அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்இ சிறப்பு அதிதிகளாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் கலன் சூரியஇ நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இரா.லதாகரன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள்,பயனாளிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து உரையாற்றிய கலையரசன்:
அரசியல் ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை தமிழர்களுக்கு இருக்கின்றது. ஏன் எனில் தமிழ் மக்களின் அரசியல் இருப்பு இதமிழர்களின் தாயக அபிவிருத்தி என்பன தமிழ்தேசிய கூட்டமைப்பினராலே சாத்தியமாகும்.
அரசியல் முன்னெடுப்புக்களுடன் தமிழ்ப்பிரதேச அபிவிருத்தியிலும் அதிக கரிசனையுடையதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னெடுப்புக்கள் இருக்கும்
இந்த நாட்டில்  அரசாங்கத்தை உருவாக்கியதில் பெரும் பங்காளர்களாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றபோது ஏன் தமிழ்ப்பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுகின்றது என மக்கள் எங்களிடம் கேட்கும் போது பதில் சொல்லமுடியாமல் இருக்கின்றது
வடகிழக்கில் இருக்கின்ற எந்தக் கட்சியாக இருந்தாலும்  தமிழ் பேசுகின்றவர்கள் என்ற நிலையில்  அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக  செயற்படவேண்டிய தேவை இருக்கின்றது

வெறுமனே தெருவில் நின்று விமர்சனம் செய்யாது இளைஞர்கள் தமிழர் தம் பிரச்சினைகளை தீர்க்க எம்மோடு கைகோர்க்க வேண்டும். இதில் உங்களுடைய உழைப்புக்கள் கடுமையாக இருக்க வேண்டும். வெறும் விமர்சனங்களை முன்வைக்ககூடாது. அரசியல்வாதிகளது பணி என்ன என்று கேட்க வேண்டும்.
தமிழர் நிலப்பரப்புக்களை இந்த நாட்டிலே அராஜகம் செய்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்த முனைந்தனர் அதனை நாங்கள் துணிந்து நின்று எதிர்த்தோம் அவ்வாறு காப்பாற்றியதன் விளைவுதான் இந்த வீட்டு திட்டத்திற்கான காணிகளை நாங்கள் எமது மக்களுக்கு வழங்க முடிந்தது. இல்லையெனில் படை முகாங்களாக மாறியிருக்கும் என சுட்டிக்காட்டினார்.