மூன்று பாரிய ஆபத்துக்களை நாடு எதிர்நோக்குகின்றது- மகிந்த விசேட அறிக்கை



நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

இன்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை மூன்று பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் எவ்வேளையிலும் கவிழக்கூடும் என்பதே முதல் ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்தத்தின் காரணமாக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

19வது திருத்தத்தின் கீழ் பாராளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது,வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டாலும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தி;ல் தோல்வியடைந்தாலும் பாராளுமன்றத்தை கலைக்கமுடியாது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு தொடர்பான நகல்வடிவே இலங்கை எதிர்கொள்ளும் அடுத்த ஆபத்து என மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

புதிய அரசமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

புதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிகின்றோம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த ஆபத்துக்கள் யதார்த்தமாவதை தடுப்பதற்கான அரசியல்சக்தியாக எனது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியே காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்