மட்டக்களப்பில் நெல் கொள்வனவு குறித்து நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம்




மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை நெல் கொள்வனவுகள் அறுவடை தொடக்கத்தில் இருந்தே நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுகள் மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக ஆரம்பமாகவுள்ளன என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார்.

மாவட்ட செலயகத்தில் வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்ற நெல் அறுவடைக் கொள்வனவு குறித்து நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

வருடா வருடம் ஏற்படும் விவசாயிகளின் நெல் விற்பனைப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் அரசாங்க அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வவுணதீவு, மணல்பிட்டி, தும்பங்கேணி, கரடியனாறு, புலிபாய்ந்தகல், கஜுவத்தை ஆகிய பிரதேசங்களிலுள்ள களஞ்சியசாலைகளில் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவுகள் நடைபெறவுள்ளதுடன், நடமாடும் நிலையஙகள் ஊடாகவும் பல பிரதேசங்களில் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் என்று நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் டப்ளியூ.எம்.என்.ஆர்.வீரசேகர தெரிவித்தார்.

விவசாயிகள் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி நியாயமான விலையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாடு நெல் 38 ரூபாய் வீதமும், சம்பா நெல் 41 ரூபா வீதமும் விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் நெல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பங்களை களஞ்சியசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு விவசாயிடம் இருந்து 2000 ஆயிரம் கிலோ கொள்வனவு செய்யபபடும் சரியான ஈர்ப்பதனுடையதாக நெல் விவசாயிகளால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தத் தொகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

மாவட்ட விவசாயப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வை.பி.இக்பால், மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா, பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.