பிறந்தநாளைக் கொண்டாட கடலுக்குச் சென்றவர் உயிரிழப்பு




ஏறாவூர் – பாலையடித்தோணா கடலில் சடலமாக குடும்பஸ்தர் ஒருவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த நபரின் சடலம், சந்திவெளி கிராமத்தை வசிப்பிடமாகக்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவருடையது என இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் வரதராஜன் ருஷான் (வயது 24) என்பவருடையது என அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

சனிக்கிழமை தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடிய குறித்த நபர், நேற்று மாலை தனது மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு பாலையடித்தோணா கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது இவரும், உறவினர்கள் சிலரும் கடலில் நீராடிய போது கடல் அலையில் அள்ளுண்டு குறித்த நபர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உறவினர்களும் மீனவர்களுமாகச் சேர்ந்து கடலில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும் உயிரிழந்தவரின் சடலத்தை மாத்திரமே கண்டெடுக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நேற்று மாலை சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.