மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உழவர் விழா

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான உழவர் விழா இன்று காலை போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது

 நிகழ்வுகளில் கொடியேற்றல், தேசிய கீதம், தமிழ் மொழி வாழ்த்து, மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, வரவேற்புரை நடனம், வரவேற்புரை, நெல் குற்றுதல், பொங்கல் பானையில் புத்தரிசியிடலுடன் பொங்கல் விழா நடைபெற்றது .

 வரவேற்புரையினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தும் நிகழ்வுரையினை போரதீவுப் பற்று பிரதேச செயலாளர்  எஸ்.ஆர்.ராகுலநாயகியும் நிகழ்த்தினர்.

 மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், மாவட்ட உழவர்கள் மற்றும் கிராம மட்ட சமூக அமைப்புக்கள் இணைந்து நடத்தும் இவ் வருடத்துக்கான உழவர் விழாவில், பாரம்பரிய விளையாட்டுக்கள், கவியரங்கு, கலை நிகழ்வுகள் இடம்பெற்றன . 

காலை 7 மணிக்கு காக்காச்சிவட்டை வயலில் அறுவடை நிகழ்வு நடைபெற்று, 7.45 மணிக்கு காக்காச்சிவட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் தொடர்ந்து ஆலய முன்றலில் இருந்து தைப் பவனி ஆரம்பமானது . 

பண்பாட்டு (தைப் பவனி) பவனி மாட்டு வட்டிகள், பாரம்பரியமான கரகம், கும்மி, காவடி, வசந்தன் நடனங்கள், உழவர்களின் பாரம்பரியமான உபகரணங்கள், பொருள்களுடனான பவனிகளுடன் நடைபெற்றதுடன் இப் பவனியில் காலை அறுவடை செய்யப்பட்ட நெல்லும் எடுத்துவரப்பட்டன .  

தைப்பவனி பலாச்சோலை ஸ்ரீ கருணைமலைப் பிள்ளையார் ஆலயத்தினை வந்தடைந்ததும், மாவட்ட உழவர் விழா நிகழ்வுகள் ஆலய முன்றலில் நடைபெற்றது . பாரம்பரிய விளையாட்டுக்கள் வரிசையில் கிளித்தட்டு, வார் போர், வட்டக் காவடி, கிட்டிப்புல் உள்ளிட்டவை நடைபெற்றன 

மாவட்ட செயலகம், 14 பிரதேச செயலகங்களும் ஒவ்வொரு வகையிலான பொங்கல்களையும், பொங்கி உழவர் விழா கொண்டாடப்பட்டது கடந்த வருடம் உழவர் விழா நிகழ்வுகள், மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலயத்தில் இருந்து பண்பாட்டு பவனியுடன் மாவட்ட செலயக முன்றலில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.