ஹர்த்தாலின்போது டயர் எரிப்பு – இருவர் கைது

மட்டக்களப்பு – நாவற்குடா பகுதியில் பொதுப் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் பிரதான வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாவட்டத்தின் சில இடங்களில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் பொதுப் போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி நாவற்குடா பகுதியில் இருவர் டயர் எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் கொடுத்த தகவலின் பிரகாரம் நாவற்குடா பகுதியைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.