3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!



இலங்கையின் பல்கலைக்கழகமொன்றிற்கு அனுமதி பெறும் எண்ணத்துடன் ஒரு மாணவர் இருப்பாராயின் அவர் 3 பாடங்களுடன் கட்டாயம் பொதுச்சாதாரணப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டுமென இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத்பூஜித அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவ்வாண்டு க.பொ.த. உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

புதிய பாடத்திட்டம் பழைய பாடத்திட்டம் என இருவேறு பரீட்சைகளாக நடைபெறவுள்ளது. மூன்று பிரதான பாடங்களுடன், பொது ஆங்கிலம் என்ற பாடத்திற்கு விண்ணப்பிக்கமுடியும்.

எனினும் இப்பரீட்சை பெறுபேறு பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு பயன்படுத்தப்படமாட்டாது. மாறாக பெறுபேற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்படும்.

எந்தக்காரணத்தைக்கொண்டும் பரீட்சை நிலையமோ, விண்ணப்பித்த பாடமோ, மொழிமூலமோ பின்னர் மாற்றப்படமாட்டாது. எனவே, விண்ணப்பிக்கும் போது மிகவும் கவனமாக நிரப்பவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்திற்கமைவான பாடச்சேர்மானங்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அப்படியில்லாதவர்களின் பரீட்சைப்பெறுபேறுகளுக்கு நாடளாவிய தரம் மற்றும் மாவட்ட தரம் வெளியிடப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.