களுதாவளையில் மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போனவர் சடலமாக கண்டெடுப்பு



மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளையில் மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போன நபரொருவர், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுதாவளை குருகுலம் வீதியின் மூன்றாம் குறுக்கு வீதியில் உள்ள நீர்நிலையொன்றிலிருந்தே நேற்று (வியாழக்கிழமை) மாலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேற்றாத்தீவு வைத்தியர் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஸ்கந்தராஜா (50 வயது) என்பவருடைய சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.