வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் புகையிரத ஒழுங்கையின் ஊடாக மாற்றுவழிப் பாதை



மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் வீதி விபத்துக்கள், உயிரிழப்புகள் என்பவற்றை குறைக்கும் வகையிலான மாற்று போக்குவரத்து ஏற்பாடு தொடர்பான முதல்வரின் முன்மொழிவானது கடந்த 07.02.2019 அன்று இடம் பெற்ற 15 ஆவது சபை அமர்வில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கமைவாக திருமலை வீதியூடாக கல்முனைக்கு பயணிக்கும் வாகனங்கள் ஊறணி சந்தியின் ஊடாகத் திருப்பப்பட்டு இருதயபுரம், கள்ளியங்காடு, புகையிரத ஒழுங்கை, கல்லடிப் பாலத்தின் ஊடாக சென்றயும் வகையில் மேற்படி முன்மொழிவானது சபையில் முன்வைக்கப்பட்டது.

இந்தவகையில் குறித்த வீதிகளை இரட்டைவழி பிரதான போக்குவரத்து பாதையாக புனரமைக்கும் நடவடிக்கையின் முதற்கட்ட செயற்பாடாக மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியையும் - எல்லை வீதியையும் இணைக்கின்ற புகையிரத ஒழுங்கையினை அகலமாக்கி புனரமைப்பதற்காக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவானது மாநகர சபை உறுப்பினர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. .

மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இவ் ஆரம்ப கட்ட பணிகளுக்காக சுமார் 5 மில்லியன் ரூபாய்கள் வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.