மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றனர் ; அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர்



(டினேஸ்)

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று  19 ஆம் திகதி திருக்கோவில் 01 வாகிஸ்டர் வீதியில் அமைந்துள்ள மாவட்டக்காரியாலயத்தில் நடைபெற்றது இங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இச்சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.நா சபையின் 40 வது மாநாடு எதிர்வரும் 25.02.2019 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கின்றது அதனை இட்டு கிளிநொச்சியில் எமது சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் அந்தவகையில் அப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளோம் அதன்படி எமது பிரதேசத்தில் உள்ள சமூக சேவையாளர்கள் பெண்கள் அமைப்புக்கள் இளைஞர் அமைப்புக்கள் சிவில் சமுகங்கள் என பலரும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து எமது உரிமைகளுக்கான குரல் ஜெனிவா வரை ஒலிப்பதற்கு ஒத்தாசை வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

அத்துடன் அன்றைய தினம் நாம் ஜ.நா சபையிடம் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க கூடாது எனவும் யுத்தக்குற்றங்களுக்கு நீதிப்பொறிமுறையிலான உள்ளக விசாரணை வேண்டும் எனவும் யுத்தம் முடிவுற்று ஆறு மாதங்கள் வரையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என பல்வேறுபட்ட கோரிக்கைகளை அவ்விடத்தில் பறைசாற்றவுள்ளோம் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.

எதிர்வரும் 25.02.2019 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றார் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி கருத்துத்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.