சாய்ந்தமருது, கல்முனை உள்ளூராட்சி விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டம்



அகமட் எஸ். முகைடீன்

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள சாய்ந்தமருது மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தனியான உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கை கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான தீர்வை விரைவாக பெற்றுத்தர வேண்டுமென சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகம் உள்ளிட்ட கல்முனையின் ஏனைய பிரதேசங்களிலுள்ள பொது அமைப்புகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை மேற்கொண்டுவருகின்றன.

இதுதொடர்பாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன இராஜாங்க அமைச்சர் ஹரீசுடன் கலந்தாலோசித்து தீர்மானித்தமைக்கு அமைவாக சாய்ந்தமருது மற்றும் கல்முனையின் ஏனைய பிரதேசங்களுக்கான உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பில் தீர்வை எட்டுவது சம்பந்தமான உயர் மட்ட கூட்டம் ஒன்றை எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடத்துவதற்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தன நடவடிக்;கைகளை முன்னெடுத்துவருகின்றார்.

இக்கூட்டத்தில் பொறுப்புவாய்ந்த கட்சித் தலைமைகள் என்றவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத்பதியுதீன் ஆகியோர் கட்டாயம் கலந்துகொண்டு இப்பிரச்சினைக்கான ஆலோசனைகளையும் யோசனைகளையும் வழங்குமாறு அமைச்சர் வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார். அத்தோடு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக கருதப்படும் இக்கூட்டத்தில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பது தொடர்பான பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டு தீர்வை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.