சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஒருவருடத்தில் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட முறைபாடுகள் எவ்வளவு தெரியுமா?



ஒரு வருடத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 9000 முதல் 10000 வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார பாராளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

இலங்கையில் ஒரு வருடத்தில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 9 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன.

இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 1539 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 9193 சிறுவர் துன்புறுத்தல்களும். 2016 ஆம் ஆண்டு 1275 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 8086 சிறுவர் துன்புறுத்தல்களும், 2017 ஆம் ஆண்டு 1175 சிறுவர் துஷ்பிரயோகங்கள்,7839 சிறுவர் துன்புறுத்தல்கள் என்பன இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.