கிழக்கு மாகாணத்தில் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் சகல ஆசிரியர்களுக்கும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம்

கிழக்கு மாகாணத்தில் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் சகல ஆசிரியர்களுக்கும் ஏப்ரல் 05 க்கு முன்பு சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவிப்பு

பாடசலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உதவி ஆசிரியர்களையும் ,பட்டதாரி ஆசிரியர்களையும் உள்வாங்குவதற்கு ஆளுநர் உத்தரவு



கிழக்கு மாகாணத்திலே வேறு மாவட்டங்களில் கடமை புரிகின்ற ஆசிரியர்களை சொந்த மாவட்டங்களுக்கு ஏப்ரல் 05 ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
நேற்று  காலை (18.02.2019) மட்டக்களப்பு ஆளுநர் பணிமனையில் இடம்பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர் ,வலயக்கல்வி பணிப்பாளர்கள்,மேலதிக கல்விப்பணிப்பாளர்கள், ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலில் இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்தார்.

இந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படவுள்ளது. அதற்கான விண்ணப்பத்தை பெற்று
இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்பு தங்களது தகவல்களை மாகாண கல்வித்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கின்ற பட்சத்தில் ஏப்ரல் 05 திகதி தொடக்கம் இடமாற்றங்கள் வழங்கப்படும்.

அத்தோடு இந்த இடமாற்றத்தினால் கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் 800 ஆசிரிய வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவதற்காக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரவுள்ளது .ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் தொழிற்படும் விதமாக உயர்தரம் சித்தியடைந்து சம்பந்தப்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் உத்தரவின் பிரகாரம் பொதுச்சேவை ஆணைக்குழு ஒவ்வொரு வலயக்கல்வி பணிப்பாளர் அலுவலகத்திலும் நேர்முக பரீட்சைகளை நடாத்தி பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும் இந்த கலந்துரையாடலில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் ரூபா 500 கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ள மாணவர்கள் தொடர்பான விபரங்கள் , பாடசாலை தளபாட பற்றாக்குறை, போன்ற விடயங்கள் இன்று ஆளுநர் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இக் கலந்துரையாடலில் ஆளுநர் தெரிவிக்கும் பொழுது " நாங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளோம் ,உடனடியாக இந்த மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் அடைய வேண்டும் . 18 வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு மற்றும் பிரதேச கல்வி பணிப்பாளர்களுக்கு புதிய வாகனங்கள் ,தேவையான தளபாடங்கள், வழங்கவுள்ளேன்.
சகல வளங்களும் வழங்கப்படுகின்ற பொழுது இந்த மாகாணத்தின் கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும். இந்த ஆண்டு முடிவடையும் போது கல்வியில் சிறந்த பெறுபேற்றை பெற்றுதர வேண்டும் "என்றும் ஆளுநர் சகல வலயக்கல்வி பணிப்பாளருக்கும் உத்தரவு விடுத்துள்ளார்.

இச்சந்திப்பில் மாகாண கல்வி பணிப்பாளர் எம்.சி நிசாம், உதவிகல்வி பணிப்பாளர் உனைஸ் ஆரிப் ,வலயக்கல்வி பணிப்பாளர்கள்,மேலதிக கல்வி பணிப்பாளர்கள், மேலதிக கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.