வயல் நிலங்களுக்கான நீர்ப்பாசனம் தடைப்பட்டுள்ளதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் !



ஏஎம் றிகாஸ்

மட்டக்களப்பு -உறுகாமக்குளத்திலிருந்து வயல்நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சல் செய்யப்பட்டு வந்த வாய்க்காலை மறித்து சங்குலக்குளம் கட்டப்பட்டதனால் சுமார் 3500 ஏக்கர் வயல் நிலங்களுக்கானநீர்ப்பாசனம் தடைப்பட்டுள்ளதைக் கண்டித்து விவசாயிகள் (20) புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலுப்படிச்சேனை பிரதேசத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல விவசாயிகள் தமது கோரிக்கையடங்கிய வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திநின்று கோஷங்களை எழுப்பினர்.

புதிதாக சங்குளக்குளம்; கட்டப்பட்டு நீர்ப்பாசனத்திற்காக சிறிய
குளாய்கள் மாத்திரம் பொருத்தப்பட்டுள்ளதனால் பழவெட்டான், தளவாய்,
பாலகன்வெளி, கூமாச்சோலை, தம்பானம்வெளி மற்றும் கயிருவெளி ஆகிய
கண்டங்களிலுள்ள வயல்நிலங்களுக்கு போதியளவு நீர் கிடைப்பதில்லை என
விவசாயிகள் குற்றஞ்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.

கடந்த கால நெற்செய்கையின்போது போதியளவில் நீர் கிடைக்காமையினால்
25 சதவீதமான அறுவடையையே பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த வாய்க்காலுக்கு ஆறு அடி நீளமான மூன்று கதவுகளைப்
பொருத்தும் பட்சத்தில் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தைப்
பெற்றுக்கொள்வது மாத்திரமின்றி இக்குளத்தினை நன்னீர்மீன்பிடியாளர்களும்
பயன்படுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது.