பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு விடிவு வேண்டும்



மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 20 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு, விடிவு வேண்டுமென, மாவட்ட காணிக்குப் பொறுப்பான மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலகமும் வீ எபெக்ற் (We Effect) சர்வதேச தன்னார்வ உதவு ஊக்க நிறுவனமும், இன்னும் சில தொண்டு நிறுவனங்களின் அனுசரணையோடும் இடம்பெற்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, (18) இடம்பெற்றபோது, அவர் இதனைத் தெரிவித்தார்.

கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பெண் தலைமை முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நவரூபரஞ்சினி, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் குடும்பங்கள் மீது முக்கிய கரிசனை கொண்டு, இக்குடும்பங்களிலுள்ள முயற்சியாளர்களான பெண்களை இனங்கண்டு, அவர்களிடமுள்ள தொழிற் திறன்களை மேலும் வளர்க்க உதவ வேண்டுமென்றார்.

கிராம மட்டத்தில் கடமையாற்றுகின்ற ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் முயற்சியுடைய பெண்களை இனங்கண்டு, அவர்களை மேலும் முன்னேற்றத்துக்குக் கொண்டு வருவதற்கு ஊக்க உதவிகளை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.