திருகோணமலை நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்தவும்



மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸாருக்கு உத்தரவு

திருகோணமலை நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்துமாறு கிழக்கு பிராந்திய திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (18) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நாளை (19) "கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்" தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்ற நிலையில் மனுதாரர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி எம். சீ. சபருள்ளா என்பவருக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பில் நீதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்தே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.கே.எம். மன்சூர் ஏலவே பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆட்சேபனை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் 05ம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளம்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நாளைய தினம் 19ம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.