ஒலுவில் துறைமுகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்




ஒலுவில் துறைமுகத்தை வைத்து, சிலர் அரசியல் செய்த வரலாறு இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், மீனவச் சமூகமும் ஒலுவில் தொடக்கம் நிந்தவூர் வரையான குடியிருப்பாளர்களும் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.

மீனவச் சமூகம், பள்ளி நிர்வாகம் ஆகியோர்களுக்கும் பிரதியமைச்சருக்கும் இடையில், ஒலுவிலில் துறைமுக அதிகார சபையின் விடுதியில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், திருகோணமலை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில், மீன்பிடித் தொழிலை சுமூகமாகச் செய்யக்கூடிய, நீண்ட கால அபிவிருத்தி ஊடாக, பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு, அபிவிருத்தி மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

பிரதமர், அமைச்சர்களான சாகல, ரிஷாட் ஆகியோருடனும் இது விடயமாக பாரிய திட்டமொன்றை வகுத்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக தங்களது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்த பிரதியமைச்சர், எதிர்வருகின்ற வாரங்களுக்குள் சரியான ஆலோசனைகளை வழங்கினால், பிரச்சினைகளைத் தீர்த்து, அபிவிருத்திக்காகத் தூர நோக்குடன் செயற்பட முடியுமென்றார்.

பல்வேறு திட்டங்கள் ஊடாக, ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தியடையச் செய்வதால், மீனவச் சமூகம் பயன் பெறக்கூடிய பொருளாதார வலயமாக இதை மாற்றுவதுடன், இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் வழங்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.