மட்டக்களப்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து கறுப்புப் பட்டியணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்




க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து கறுப்புப் பட்டியணிந்து இன்று புதன்கிழமை அரை மணித்தியாலம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பல பாடசாலைகளின்  அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து அமைதியான முறையில் கற்றலுக்கு இடையூறு விளைவிக்காமல் ஈடுபட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இன்று புதன்கிழமை (13.03.2019) நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அதிபர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்.இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.இலங்கை ஆசிரியர் சங்கமும்,தமிழர் ஆசிரியர் சங்கமும் இணைந்து மாபெரும் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தமிழர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி.வசந்தா குமாரசாமி தெரிவித்தார்.

திட்டமிடப்பட்டுள்ள இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்;

ஆசிரியர்கள்,அதிபர்கள் இணைந்து நாம் ஒற்றுமையுடன் கறுப்புப் பட்டியணிந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தி விட்டு இன்றைய தினம் கறுப்புப் பட்டியுடனேயே கற்பித்தல் கடமைகளைச் தொடர்ந்து செய்யவுள்ளோம்.

குறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்களின் வேதனங்கள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும்,ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை தீர்க்ககோருதல்,ஆசிரியர்களுக்கான அவசியமற்ற சுமைகள் , நெருக்குதல்கள் நீக்கப்படவேண்டும் எனவும், மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை எனவும்,நாம் இதற்கு முன்னர் பல போராட்டங்களை முன்னெடுத்த போதும் எந்தப் பயனும் இதுவரை கிட்டவில்லை.

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பளத்தை அதிகரித்தல், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றுதல், மொத்தத் தேசிய உற்பத்தியில் மாணவர்களின் கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்குதல்,ஆகிய மூன்று அம்சங்களடங்கிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை புதன்கிழமை 13.03.2019 முன்னெடுத்தார்கள்.

இப் போராட்டத்தை மாணவர்களும்,பெற்றோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இன்றைய தினம் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்குச் வருகைதந்து கைகளில் கறுப்புப் பட்டி அணிந்தும்,பாதாதைகளை தாங்கியவாறும், பாடசாலை நுழைவாயில் அமைதியாக ஒன்றுகூடியும் தமது கவனயீர்ப்பை வெளிப்படுத்தி, இன்றைய நாள் முழுவதும் கறுப்புப் பட்டியுடன் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.