மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி பலி!



கட்டட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தரான மேசன் தொழிலாளி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி -01, பதுரியா பகுதியில் நேற்றய தினமான சனிக்கிழமை (09.03.2019) பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புதிய காத்தான்குடி-02, மீன்பிடி இலாகா வீதியை அண்டிய பகுதியில் வசிக்கும் பிள்ளை ஒருவரின் தந்தையான முஹம்மது அனீஸ் (வயது 29) என்பவரே பலியாகியுள்ளார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இவர் காத்தான்குடியில் திருமணம் முடித்து அங்கேயே தொழில் புரிந்து வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகள் மிக நெருக்கமாக உள்ள கட்டிடத்தில் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது இவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து, காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.