அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியே – உறுதி என்கிறது சுதந்திரக் கட்சி




2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமிப்பது உறுதி என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமிப்பது உறுதி. கட்சி என்ற வகையில் அவரை வேட்பாளராக தெரிவுசெய்ய எமக்கு உரிமையுள்ளது.

எமது கட்சியை கட்டியெழுப்புவது போன்று, கட்சியின் தலைவரையும் உருவாக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்ததால் அவர் நினைத்தவற்றை செய்தார்.

கடந்த நல்லாட்சியில் முழுமையான அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கியதுபோல் வழங்கினால், சுதந்திரக் கட்சியினர் அடிபடுவது நிச்சியம். நாம் அன்று இணையாவிட்டால் நாடு அநாதையாக்கப்பட்டிருக்கும்.

பொதுஜன பெரமுன தரப்பினர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்துவிட்டதாக கூறினர். ஆனால் சுதந்திரக் கட்சி இது குறித்து பேச்சுவார்தைகளை நடத்தி வருகின்றது. நாட்டை கருத்திந்கொண்டே நாம் முடிவை எடுப்போம்.

எவ்வாறான கூட்டமைப்பை உருவாக்கினாலும், சுதந்திரக் கட்சியின் தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்படும். நாம் இணையாவிட்டால் பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் பாரிய சவாலை எதிர்நோக்கும். எனவே இன்னும் பல கட்சிகளை இணைத்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது அவசியம்” என்று தெரிவித்தார்.