அகில இலங்கை மக்கள் காங்கிரசால் இலவச மின்சாரம் மற்றும் நீரிணைப்பு வழங்கிவைப்பு




அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மாவடிப்பள்ளியை சேர்ந்த 80 பயனாளிகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை வழங்கும் நிகழ்வு (09) மாவடிப் பள்ளியில் இடம்பெற்றது.

மாவடிப்பள்ளி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழுத்தலைவர் அப்துல் ரஸாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

காரைதீவு பிரதேச சபை மக்கள் காங்கிரஸ் சார்பு உறுப்பினர் முஸ்தபா ஜலீல் அனுசரணையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேலும் பல மத்திய குழு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் கடந்த காலங்களில் நான் மு.காவில் தேர்தல் கேட்டபோது என்னை இருதடவைகள் வாக்களித்து கிழக்கு மாகாணத்தில் ஆளுமை மிக்க மாகாண சபை உறுப்பினராக என்னை அனுப்பிய நீங்களில் இனிவரும் காலங்களில் கூட என்னை மாகாண சபை உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினராக அனுப்புவிர்கள் என நம்புகிறேன்.

சுகயினம் காரணமாக ஓய்வில் இருந்த நான் இப்போது நேரடியாக மீண்டும் நான் கள அரசியலில் களமிறங்க தயாராகி வருகிறேன். முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்கான ஒரு இயக்கமில்லை. மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் மக்கள் இயக்கம் மக்கள் காங்கிரஸ் மட்டுமே. என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல், மாவடிப்பள்ளியில் கம்பெரேலியா எனும் திட்டத்தில் வீதிகளை செப்பனிடுவதாக கூறிக்கொண்டு சிலர் செய்யும் அபிவிருத்திகள் மிக கேவலமாக உள்ளது. அறுவடை போகமான இந்த காலகட்டத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரிக்கும் காலமாகும் வெளிச்சம் போடவேண்டிய இடங்களில் வெளிச்சம் போடாமல் சம்பந்தமில்லாமல் தெருவிளக்குகள் பொருத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பேரியல் இஸ்மாயில் அஷ்ரபின் காலத்தில் நாங்கள் செய்த சேவைகளை இப்போதுதான் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்றார்.