காணிப்பதிவகத்திற்கான ஆவணம் பதிவு செய்தலின் ஒருநாள் துரித சேவைக்கான அங்குரார்ப்பண நிகழ்வு




(க. விஜயரெத்தினம்)


காணிப்பதிவகத்திற்கான ஆவணம் பதிவு செய்தலின் ஒருநாள் துரித சேவைக்கான தேசிய நிகழ்வுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களினதும் ஆலோசனையின் கீழ் உள்ளக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் எண்ணக்கருவில் பதிவாளர் நாயகம் என்.சீ.விதானகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்படுகின்ற மட்டக்களப்பு காணிப்பதிவகத்திற்கான ஆவணம் பதிவு செய்தலின் ஒருநாள் துரித சேவைக்கான உத்தியோகபூர்வ நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி ,விவசாயம்,நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி அவர்களும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண காணிப்பதிவாளர் நாயகம் கே.திருவருள்,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன்(காணி),உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்,மேலதி மாவட்ட பதிவாளர்,பிரதேச செயலாளர்கள்,உதவிப்பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் ,சட்டத்தரணிகள் ,பிரதேச,கிராமிய பதிவாளர்கள் உட்பட பல பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

இதன்போது ஆவணங்கள் பதிவு செய்தலின் ஒருநாள் சேவை மற்றும் சர்வதேச தரத்தின்படி தயாரிக்கப்படுகின்ற புதிய பிறப்புச் சான்றீதழ்கள், காணிப்பத்திரங்களை (உறுதிகள்) இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி உத்தியோகபூர்வமாக இச்சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இவ்விஷேட நிகழ்வை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் அமைச்சர் அமீரலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்கள் இணைந்து பழமரக்கன்றை நாட்டிவைத்தார்கள்.