தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமைப் பதவியை நான் கேட்கவில்லை



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமைப் பதவியை நான் கேட்கவில்லை, அந்த தலைமைப் பதவியிலும் எனக்கு ஆர்வமும் இல்லை என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பில் கட்சிக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அவ்வாறிருக்கையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பிலான கருத்தைச் சொல்லியிருக்கின்றார். ஆனாலும் அவர் ஏன் அதைச் சொல்லியிருக்கின்றார் என்றும் ஒருவருக்கும் தெரியாது.

அது நல்ல நோக்கோடு சொல்லப்பட்டதா அல்லது தீய நோக்கோடு சொல்லப்பட்டதா என்று கூட எங்களுக்குத் தெரியாது. அப்படியான தலைமை மாற்றம் என்கின்ற விடயம் தொடர்பில் நாங்கள் ஒருபோதும் பேசினது கிடையாது. எனக்கும் அதைப்பற்றி எந்தவிதமான ஆர்வமும் கிடையாது.

மேலும் தலைமை மாற்றம் குறித்து கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் சிலர் வரவேற்றும் சிலர் எதிர்த்தும் வருகின்றதைப் பற்றி நான் ஒன்றும் செய்ய இயலாது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதைப் பற்றியும் பலர் எதிர்க்கருத்தையும் இன்னும் பலர் சாதகமான கருத்தையும் சொல்லுவார்கள்.

நான் அரசியலில் இருப்பதைப் பற்றியும் அப்படியான நிலைப்பாடுகள் தான் இருக்கிறது. ஆனபடியினால் தலைமைப் பதவி என்பது ஒரு நாளும் நான் கேட்டதும் இல்லை. அதற்கான ஆர்வமும் இல்லை. ஒரு அரசியலமைப்புத் திருத்தம் மூலமாக நீண்டகாலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கத்திற்காகவே நான் அரசிலுக்கு வந்தேன். அந்த நோக்கம் நிறைவேறுவதற்காகத் தான் என்னுடைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது என எம்.ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.