மண்முனை வடக்குக்கான தமிழ்மொழி விழா தமிழ் கலாச்சார,பண்பாட்டுடன் சிறப்பாக நடைபெற்றது



(க. விஜயரெத்தினம்)

தமிழர்களின் கலை,கலாச்சார,பண்பாட்டுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மண்முனை வடக்குக்கான தமிழ்மொழிதினப்போட்டி நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயத்தில் உள்ள மண்முனை வடக்குக்கான தமிழ்மொழி தினப்போட்டியானது தமிழர்களின் பாரம்பரிய கலை,கலாச்சார,பண்பாட்டு முறைப்படி கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.ரகுகரன் தலைமையில் சனிக்கிழமை (6) காலை 9.00 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.மயில்வாகனம் பிரதம அதிதியாகவும்,விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி சுஜாதா குலேந்திரகுமார்(நிருவாகம்),திருமதி தேவரஜனி உதயாகரன்(கல்வி அபிவிருத்தி),கே.கங்காதரன்(முகாமைத்துவம்),உதவிக்கல்வி பணிப்பாளர்களான(தமிழ்) ஆர்.ஜே.பிரபாகரன்,திருமதி உமாவதி விவேகானந்தம்(ஆரம்பக்கல்வி)முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர்களான ஏ.சுகுமாரன்,கே.அருட்பிரகாசம்,மற்றும் மட்டக்களப்பு தமிழ்சங்கத்தின் தலைவரும் முன்னாள் வடகிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளருமான எஸ்.எதிர்மன்னசிங்கம் மற்றும் அதிபர்களான ரீ.அருமைத்துரை,சு.சகஸ்ரநாமம்,திருமதி மாலதி பேரின்பநாதன்,இ.பாஸ்கர்,பயஸ் ஆனந்தராசா,திருமதி தவத்திருமகள் உதயகுமார், அருட்சகோதரி சாந்தினி, ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் அதிதிகளை மாலை அணிவித்து கலாச்சார இசைகள் முழங்க மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல்,தமிழ்மொழி வாழ்த்து,மும்மத அனுட்டானம், தலைமையுரை,விஷேட உரை,என்பன இடம்பெற்று தமிழ்மொழி தினப்போட்டிகள் ஆரம்பமானது.

தமிழர்களின் கலாச்சாரத்துக்கு கௌரவடுத்தும் வகையில் தமிழ்மொழி தினப்போட்டியின் விஷேட நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்சங்கத்தின் தலைவரும்,முன்னாள் வடகிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பெற்றார்.
 
மாணவர்களின் உள்ளார்ந்த செயற்பாடுகளையும்,ஆற்றல்களையும் விருத்தி செய்து செம்மொழியான தமிழ்மொழியை மேம்படுத்துவதற்கும் ,தமிழ்மொழியின் தொண்மங்களை அழியாமலும் சிதைவடையாமலும் தொடர்ச்சியாக மாணவர்கள் மத்தியில் பாதுகாக்கவே தமிழ்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விபுலானந்தரை நினைவுகூரும் வகையில் பாடசாலை மாணவர்களை இணைத்து நடாத்தப்படுகின்றது.இதன்மூலம் தமிழர்களின் பாரம்பரிய தமிழ் மரபுக்கலைகளான வில்லுப்பாட்டு,வசந்தன்,கும்மி,கூத்து,நாட்டார்பாடலை முறையாக பாதுகாக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் 39பாடசாலைகளின் மாணவர்களின் வாசிப்பு ,பேச்சு, நடனம், பாவோதல்,நாட்டார் பாடல்,வில்லுப்பாட்டு, தனிநடிப்பு,அறிவிப்பாளர் போட்டி உட்பட 35 வகையான போட்டிகள் நடைபெற்றது.