இன வேறுபாடுகளைக் களையாமல் கிழக்கு விடியாது; கிழக்கு மாகாண ஆளுநர்

இன வேறுபாடுகளைக் களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒருபோதும் முன்னேற்றமடையச் செய்ய முடியாதென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

அமெரிக்க அரசாங்கத்தின் மனிதாபிமான நலன்புரி அமைப்புத் திட்டத்தால் நிறைவுசெய்யப்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை, ஆளுநரும் அமெரிக்க உயர்ஸ்தானிகரும் வைபவரீதியாக இன்று (18) திறந்துவைத்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டுகொண்டு உரையாற்றுகையிலேயே, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகளையும், இன முரண்பாடுகளையும் முடியுமானவரை களைந்து, இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம், நிரந்தமான அபிவிருத்தியையும், இன நல்லுறவையும் கடடியெழுப்ப முடியுமென்ற நம்பிக்கையுடனேயே, மாகாணத்தின் ஆளுநர் பதவியைத் தான் பொறுப்பேற்றதாகத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் காணிப் பிரச்னைகள் அதிகம் உள்ளனவெனத் தெரிவித்த ஆளுநர், அஸ்ரப்நகர், நுரைச்சோலை சுனாமி 500 வீட்டுத்திட்டப் பிரச்சினைகள், வட்டமடுப் பிரச்சினை உள்ளிட்ட தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இங்கு காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் காணிப் பிரச்சினைகளுக்கு, வனப்பரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், புராதனத் திணைக்களம் ஆகியன முக்கிய காரணமாக அமைந்துள்ளனவெனவும் இவைகள் மக்களுக்குப் பல்வேறு அசௌகரியங்களைக் கொடுத்துவருவதாகத் தான் அறிவதாகவும் இதை ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளதாகவும், ஆளுநர் தெரிவித்தார்.