குற்றச்செயல்களை உடன் தவிர்க்க Emergency App அறிமுகம்


திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனைப் பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்மூலம் உடனடி அம்பியூலன்ஸ் சேவை, தீயணைப்புச் சேவை, பொலிஸ் சேவை உட்பட அரச பாதுகாப்பின் அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (18)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட அவசர பிரச்சினைகளுக்கு உள்ளானோர்அரச பாதுகாப்புத் துறைக்கும் அறிவிக்கும் பொறிமுறையில் உள்ள குறைபாடுகளை புரிந்துகொண்டு அதற்கான தீர்வை முன்வைக்க நடவடிக்கையெடுத்துள்ளோம்.

தமக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பில் பொலிஸாருக்கும், இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும், அம்பியூலன்ஸ் சேவைக்கும் அறியப்படுத்தும் காலம் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் காலம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

1990அம்பியூலன்ஸ் சேவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. தொலைப்பேசி அழைப்பு விடுத்து 12நிமிடங்களுக்குள் குறித்த அம்புலன்ஸ் சேவையை விபத்துக்கு உள்ளான நபர் பெற்றுக்கொள்கிறார்.