மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றி. - இலங்கை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து


ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

இந்திய மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது.

இந்நிலையில் இந்திய லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவை பொறுத்தவரையில் தனியாகவே தற்போது 301இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கூட்டணியுடன் சேர்ந்து 347இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பிரதமர் மோடி தனது ட்விற்றர் பக்கத்தில் இது குறித்து தெரிவிக்கையில் 'ஒன்றாக இணைந்து நாம் வளர்வோம். ஒன்றாக சேர்ந்து வளர்ச்சியை எட்டுவோம். அனைவரையும் ஒன்றாக இணைத்து வழி நடத்தி மிக வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வென்றுள்ளது' எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸுக்கு இம்முறையும் எதிர்க்கட்சி பதவி கிடைப்பது சந்தேகம்

இந்நிலையில் காங்கிரஸுக்கு இம்முறையும் எதிர்க்கட்சி பதவி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் மே 19 ஆம் திகதி வரை நடந்தது. மொத்தமாக 542 தொகுதிகளில் பெரும்பான்மை ஆசனங்களான 272 தொகுதிகளை பெற்றால் வெற்றி எனும் நிலையில் பாஜகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் போட்டியிட்டன.

7,928 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிட்டனர். இதில் 724 பெண்கள் போட்டியிட்டனர்.

பாஜக 437 வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி 421வேட்பாளர்களையும் களமிறக்கியது. இந்திய வரலாற்றிலேயே காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் அதிகமான வேட்பாளர்களை பாஜக நிறுத்தியது.

இன்று (23) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2ஆவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் 298 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து பெற வேண்டும் என்றால் 55 தொகுதிகளில் ஒரு கட்சி வென்றிருக்க வேண்டும். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றதால், பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவில்லை.

ஆயினும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முழுமையாக முடிந்த பின்னர்தான் உறுதியாகத் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. (ஹிந்து)
hh