ஐவரது வழக்குகளையேனும் விசாரித்தால் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்வோம்



காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளில் ஐவரது வழக்குகளையேனும் விசாரித்து அவர்களை கண்டுபிடித்து தரும் பட்சத்தில் தாம் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்வோமென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் கொழும்பிற்கு விஜயம் செய்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஆணையாளரையும் அமைச்சர் மனோ கணேசனையும் சந்திந்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று யாழப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்பொதே வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் வடக்கு கிழக்கு மாவட்டங்களின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

மேலும் தாம் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஆணையாளரையும் அமைச்சர் மனோ கணேசனையும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் இதன்போது காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருவதில் செயற்பாட்டின் மூலம் ஓ.எம்.பி அலுவலகம் நிரூபித்தால் மாத்திரம் அதனை ஏற்றுக்கொள்வோமென தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளில் மாதிரியாக ஆதாரம் உள்ள ஐவரது வழக்குகளையேனும் விசாரணை செய்து முடிவுகளை அறிவிக்கும் பட்சத்தில் தாம் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்வோமென தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.