மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்



மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

83ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று சில அரசியல் குழுக்கள் நாட்டுக்கு தீ வைத்து சேதங்களை விளைவித்தேனும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்து வருவதாகவும், எதிர்வரும் தேர்தல்களில் தெரிவாகும் ஜனாதிபதியும் பிரதமரும் யார் என்ற அரசியல் சூதாட்டம் நாட்டில் இடம்பெறுவது நாட்டுக்கு பெரும் பாதிப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.

கண்டி குண்டசாலை கோணவெல தெற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இசுரு உயன்புர எழுச்சிக் கிராமத்தை நேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அனைவருக்கும் நிழல் எழுச்சிக்கிராமம் வேலைத்திட்டத்தின் கீழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள 190ஆவது மாதிரிக் கிராமம் இதுவாகும். இது 27 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் தொகுதியாகும். இதற்காக 511 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.